Monday 1 March 2010

அல்லல் படுத்தும் பஸ் பயணம்

இந்தியாவில் பஸ்ஸில் பயணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் கொடுமை இது. சில ஆண்களின் வக்கிரப்பார்வை மற்றும் அசிங்கமான தடவல்களிலிருந்து ஒரு பெண் கூட தப்பித்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட அனுபவமே எனக்கு இல்லை என்று சொல்பவர்கள் பஸ்ஸில் பயணித்திருக்க மாட்டார்கள் அல்லது வெளியில் சொல்ல கூச்சப்படுகிறார்கள்.

இந்த நாய்கள் சிறு குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை! கண்ணியமாக உடையணிந்தால் கூட இவர்களின் கழுகுப் பார்வைக்கு தப்ப முடிவதில்லை. போதாக்குறைக்கு இப்போது செல்ஃபோன் கேமராக்கள் வேறு. இந்த தொல்லைகளுக்கு பயந்தே படிக்கும் போது நான் கல்லூரிப் பேருந்தை தவிர மற்ற பஸ்களில் செல்வதை முடிந்த வரை தவிர்ப்பேன்.

எதற்கு பயப்பட வேண்டும் துணிச்சலுடன் எதிர்க்கலாமே என கேட்கலாம். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொன்னால் ஏன் எதிர்க்க தயங்குகிறோம் என்பது புரியும்.

அன்று நானும் என் தோழியும் புராஜெக்ட் விஷயமாக திருநெல்வேலி சென்று நாகர்கோவில் திரும்பிக் கொண்டிருந்தோம். சங்கர் நகரிலிருந்து ஏறியதால் பஸ்ஸில் கூட்டம். உட்கார இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டுதான் பயணம். அந்த நிறுத்தத்திலேயே சில கல்லூரி மானவர்கள் தப்பு தப்பு கல்லூரி பொறுக்கிகள் ஏறினார்கள். ஏறியதிலிருந்தே நாம் எவ்வளவு விலகி நின்றாலும் நெருக்கியே நின்று உராசிக் கொண்டிருந்தார்கள். முதலில் அமைதியாக இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை. பின்னர் கோபம் வந்து செருப்பை கழற்றி அடிக்க ஓங்கி விட்டேன்.

என்னடி பெரிய பத்தினி மாதிரி பேசற அப்படீன்னு ஆரம்பிச்சு கேவலமா பேச ஆரம்பிச்சுட்டானுங்க. ஆனால் மற்றவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை பெண்கள் உட்பட. அதன் பின்னும் அந்த பஸ்ஸில் பயணம் செய்வது கஷ்டம் என்பதால் ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் இறங்கி அடுத்த பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம். நான்கு பேர் முன்னால் காரணமே இல்லாமல் கேவலப்பட்ட மன உளைச்சல்தான் எதிர்த்ததற்கு எங்களுக்கு கிடைத்த பரிசு.

ஒரு அநியாயம் நடக்கிறது ஆனால் அது எனக்கு நடக்காதவரை ஏன் என்று கேட்க மாட்டோம் என்ற மனநிலை நம்மிடையே ஊறிப் போயிருக்கிறது.

பெண்களுக்கு எதிரான இந்த கொடுமை இன்னும் நம் நாட்டில் தினம் தினம் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. கேரளாவில் பஸ்ஸில் பயணித்த ஒரு பெண்ணின் மீது ஒரு வக்கிரப்புத்தி ஜென்மம் தன் விந்தை வெளியேற்றி ரசித்திருக்கிறான். எழுதவே கூசுகிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் சுதாரித்துக் கொண்டு நேரே காவல்நிலையம் சென்று புகாரளித்துள்ளார். ஆனால் அதன் பின் அரங்கேறியவைதான் மிகவும் வேதனைக்குரியது.

விசாரணை என்ற பெயரில் அந்த பெண்ணை மிக அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருகின்றனர் நம் காவல்துறை அதிகாரிகளும் வழக்கறிஞர்களும். சமூகமும் இவரையே குற்றவாளியாக்கியது. இவர் புகாரளித்தது தவறாம்! வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு சும்மா இருந்திருந்தால் இப்படி கோர்ட்டும் போலீஸ் ஸ்டேஷனும் ஏறி இறங்கியிருக்கவேண்டாமாம். இப்போது குடும்பத்துக்கும் கெட்ட பெயர் வந்து விட்டதாம்! என்ன கொடுமை இது?!

பெண்ணாய் பிறந்ததற்காக தனக்கெதிரே நடந்த கொடுமையைக் கூட வெளியில் சொல்லாமல் அமைதியாக பொறுத்துப் போகச் சொல்கிறதா சமூகம்?! நல்லவேளையாக அந்த பெண் மனோதிடம் மிக்கவராக இருந்ததால் இத்தனை தடைகளையும் தாண்டி வந்திருக்கிறார். வழக்கு முடிய ஆன காலம் எவ்வளவு தெரியுமா அதிகம் இல்லை 10 வருடங்கள் மட்டுமே! அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை வெறும் அபராதம் மட்டுமே!

ரயிலிலும் பிரச்சினைதான். நான் சென்னை சென்று கொண்டிருந்த போது மனைவியுடன் ஏறிய ஒருவன் எதிர் பெர்த்தில் மனைவி படுத்திருக்கும் போதே அப்பர் பெர்த்தில் படுத்திருந்த என்னிடம் வாலாட்ட முயன்றான். கையில் இருந்த பெல்ட்டால் நாலு போடு போட்ட பின் முக்காடு போட்டுக் கொண்டான் அந்த பொறுக்கி.

சில ஆண்களிடம் இருக்கும் இந்த வக்கிரப் புத்திக்கு காரணம் என்ன? எல்லாரும் சொல்வது போல் ஆண் பெண்ணை இயல்பாக பழகவிடாமல் தடுக்கும் நம் சமூக அமைப்பா அல்லது பெண்ணைப் போகப்பொருளாக காட்டும் மீடியாக்களா அல்லது ரவுடியிசத்தை ஹீரோயிசமாக காட்டும் சினிமாக்களா?! எதுவாக இருந்தாலும் இது மாற வேண்டும்.

17 comments:

  1. //ஆண் பெண்ணை இயல்பாக பழகவிடாமல் தடுக்கும் நம் சமூக அமைப்பா அல்லது பெண்ணைப் போகப்பொருளாக காட்டும் மீடியாக்களா அல்லது ரவுடியிசத்தை ஹீரோயிசமாக காட்டும் சினிமாக்களா?! //

    கண்டிப்பாக இந்த இரண்டு விசயங்கள் தான் காரணம்.

    பெண்கள் தான் இதை மாற்ற முடியும்... அல்லது அரபு நாடுகள் போல தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும். கேரள பேருந்தில் அந்த செயலை செய்தவன் அரபு நாட்டில் செய்து இருந்தால் நிச்சயம் மரண தண்டனைதான்.



    நீங்க ரொம்ப தைரியசாலிபோலருக்க... செருப்பு, பெல்ட்டுன்னு ரொம்ப டெரரா இருக்கீங்க...:)

    ReplyDelete
  2. பதிவுளை தமிழ்மணம், தமிழிஷ் போன்றவற்றில் இணையுங்கள் அப்பதான் உங்க பதிவுகள் எல்லாரும் படிக்க முடியும்...

    ReplyDelete
  3. //ஒரு அநியாயம் நடக்கிறது ஆனால் அது எனக்கு நடக்காதவரை ஏன் என்று கேட்க மாட்டோம் என்ற மனநிலை நம்மிடையே ஊறிப் போயிருக்கிறது.///

    எத்தனை பேரை அடிப்பீங்க ? பத்து வயசு பையன் டீச்சரை லவ் பண்றானு படம் வரும் வரை இந்த அநியாயம் தொடரும். சென்சார் போர்டுல என்பது சதவீத பெண்கள் வரும் வரை இந்தியாவுக்கு விடிவுகாலம் இல்லை.
    ஒரே வரி பதில் ::பெண்கள் கராத்தே கற்றுக்கொள்ளுங்கள்.தம் கையே தமக்குதவி.

    ReplyDelete
  4. //பெண்கள் தான் இதை மாற்ற முடியும்... அல்லது அரபு நாடுகள் போல தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும். கேரள பேருந்தில் அந்த செயலை செய்தவன் அரபு நாட்டில் செய்து இருந்தால் நிச்சயம் மரண தண்டனைதான்.//

    நம் நாட்டில் தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ புகாரளித்த பெண்ணுக்கு மன உளைச்சல் தண்டனை மட்டும் நிச்சயம்.

    //நீங்க ரொம்ப தைரியசாலிபோலருக்க... செருப்பு, பெல்ட்டுன்னு ரொம்ப டெரரா இருக்கீங்க...:)//

    எல்லாம் பலமுறை இதுபோன்ற கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்ததால் கிடைத்த தைரியம்தான். கத்தி, குண்டூசி, காம்பஸ், குடை வைத்தியம் கூட நிறையபேருக்கு பார்த்திருக்கிறேன். ஆனால் அவனுங்க வியாதி மட்டும் குணமடைஞ்சதா தெரியவே இல்லை :-(

    ReplyDelete
  5. //பதிவுளை தமிழ்மணம், தமிழிஷ் போன்றவற்றில் இணையுங்கள் அப்பதான் உங்க பதிவுகள் எல்லாரும் படிக்க முடியும்...//

    இணைத்து விடுகிறேன். ஆலோசனைக்கு நன்றி பிரதாப்!

    ReplyDelete
  6. //ஒரே வரி பதில் ::பெண்கள் கராத்தே கற்றுக்கொள்ளுங்கள்.தம் கையே தமக்குதவி//

    சத்தியமான உண்மை! ஆனாலும் இந்த நரம்பு ரோகிகளுக்கு கராத்தே வைத்தியம் பார்த்தாலும் அடங்க மாட்டேங்கறானுங்களே!

    ReplyDelete
  7. romma thairiya saalinka ninka

    ReplyDelete
  8. நன்றிங்க சிவசங்கர்!

    ReplyDelete
  9. ungal kelvigalukku pathil solla mudiavillai ennaal,


    if anyone thinks about the women in their family before doing all such think he wont commit such things again.
    lot of guys were grown up like this.

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா!

    ReplyDelete
  11. கவி.. நான் சொல்ல ஆரம்பிச்சா சொல்லி மாளாது எங்கொடும.. எதுவும் பண்ண முடியாத கோபத்துல மனசுக்குள்ள ஒரே சாபந்தான்.. எங்கயாச்சும் ஏதாவது மெஷின்ல கைய விட்டு நசுக்கிகிட்டு சாவுங்கடான்னு மனசுக்குள்ளாறயே நினைச்சுப்பேன்.. ச்சே.. நாய்ங்க..

    ReplyDelete
  12. என்ன பண்ண சந்தனா! இதுங்களுக்கு நிச்சயம் நல்ல சாவே கிடையாது.

    ReplyDelete
  13. avan kutravalithaan.anal avanai vida periya ktravaali sutri iruntha pothu makkalthaan.

    ReplyDelete
  14. // Barari said...
    avan kutravalithaan.anal avanai vida periya ktravaali sutri iruntha pothu makkalthaan.//

    உண்மைதான் நண்பரே! நம் மக்களிடம் உள்ள பொதுவான பிரச்சினையே அதுதானே!

    ReplyDelete
  15. உங்கள் எல்லா ஆக்கங்களையும் படித்து முடித்துவிட்டேன். எல்லாமே அருமை. இந்த ஆக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. உங்களுக்கு மிகவும் துணிச்சல் தான். பாராட்டுக்கள். பெண்களுக்கு துணிவு மிகவும் அவசியம்.

    ReplyDelete
  16. சமயத்துக்கு உதவ வராத கூட்டத்தையும் சேர்த்து உதைக்க வேண்டும்.....
    ஈவ் டீசிங்கு சரியான தண்டனையை சட்டம் கொண்டுவராத வரை இந்த கழிசடைகள் திருந்தவே திருந்தாது

    ReplyDelete
  17. இந்த காலத்தில் இப்படித்தான் இருக்கனும்..

    ReplyDelete